Pages

Subscribe:
Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday, June 7, 2013

The Sicilian Girl-2001[Italy] பழிக்கு பழி - உலக சினிமா விமர்சனம்

நடந்த கொலையை பார்த்தும் சாட்சி சொல்ல தயாரில்லாத தொடை நடுங்கி கூட்டம்தான் உலகத்தில் அதிகம்.
இப்படி பயந்து வாழும் வாழ்க்கை சிஸ்டத்தின் மீதே காறி உமிழ்கிறாள் இப்படத்தின் நாயகி.

ரீட்டா ஆட்ரியா மாபியா குடும்பத்தில் பிறந்து மாபியா கும்பலை ஒழிக்க தன்னுயிரையே தந்த வீரப்பெண்மணி.
இத்தாலியிலேயே சிசிலி பகுதி மாபியாக்கள்தான் உலகப்பிரசித்தம்.
1974ல் பிறந்து 1992ல் மறைந்த ரீட்டா இன்றும் வீர மங்கையாக இத்தாலியில் போற்றப்படுகிறார்.
ஒரிஜினல் ரீட்டா அட்ரியா புகைப்படம்
ரீட்டாவின் வாழ்க்கை வரலாற்றை அழகான ஒவியமாக்கி நம்மை மயக்கியவர் இயக்குனர் Marco Amenta

உண்மை சம்பவத்தை படமாக்கும் போது...
பொதுவாக திரைப்படங்களில்...
ஆமைத்தன்மை வந்து விடும்.
இந்தப்பட்ம் விதி விலக்கு.
இயக்குனரின் திறமையால் இப்படம் ஹாலிவுட் திரைப்படம் போல் பறக்கிறது.

வன்முறையை வாழ்க்கையாக கொண்ட சிசிலி தீவில்...
அழகிய சிற்றூரில் பிறந்து....
தந்தையால் வளர்க்கப்படுகிறாள் ரீட்டா.
தந்தை அந்த ஏரியாவுக்கே மார்லன் பிராண்டோ.
தாய் சொல்லை தட்டி... தந்தையோடு பயணப்பட்டு அவரது கரங்களின் வழியாகத்தான் இந்த உலகை காண்கிறாள் ரீட்டா.

ஊரின் நன்மைக்காக ஒரு கொடியவனை தந்தை போட்டுத்தள்ளுகிறார்.
விசாரிக்க வந்த நீதிமானுக்கு, ஊர்மக்கள்.... மவுனத்தை ஆகச்சிறந்த பதிலாக தருகிறார்கள்.
அவர் மேல் சாணி அடித்து ரீட்டா அவரை எச்சரிக்கிறாள்.
சின்னஞ்சிறு குழந்தையின் வாயில் வரும் வார்த்தைகள்....
அப்பப்பா...படத்தில் வரும் பவர்புஃல் காட்சி இது.

வல்லவன் நல்லவனாக இருப்பதில் உள்ள ஆபத்து...
 ரீட்டாவின் 11 வயதில் அவளது தந்தைக்கு நேரிடுகிறது.
ரத்த வெள்ளத்தில் துடிக்கும் தந்தையை காப்பாற்ற கதறும் போது
அத்தனை கதவுகளும் சாத்திக்கொள்கின்றன.
தந்தையின் சாவுக்கு பழிக்குப்பழி..ரத்ததுக்கு ரத்தம் ...என்றே வாழ்கிறாள்.
ஊரில் ந்டக்கும் அத்தனை அட்டூழியங்களையும் தனது டைரியில் தேதி வாரியாக பதிவு செய்கிறாள்.
17வது வயதில் தனது சகோதரனையும் அதே கும்பலிடம் பறி கொடுக்கிறாள்.
நரசிம்ம அவதாரம் எடுத்தால் சாவதற்க்கு எதிரி இரண்யன் இல்லை என்பதை உணர்ந்து நீதிமானிடம் அடைக்கலம் அடைகிறாள்.
தன் மீது சாணி அடித்த கைக்கு கை கொடுக்கிறார் நீதிமான்.
அத்தனை தாதாக்களையும் ,அவர்களுக்கு துணை போன அரசியல்வாதிகளையும் சேர்த்து உள்ளே தள்ளுகிறார்.
2 ஜியில் திகார் ஜெயில் நிரம்புவது போல் இத்தாலி சிறைகள் அத்தனையும் ஹவுஸ்புல்.
தாதாக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் உள்ள ராம்ஜெத்மலானிக்களும் கபில்சிபல்களும் நீதிமன்றத்தில் திரள்கின்றனர்.
ஜாம்பவன்களின் வாதத்தை சத்தியம் என்னும் பழைய ஆயுதத்தால் அடித்து நொறுக்குகிறாள் ரீட்டா.


நீதி தேவதையே ரீட்டா வடிவெடுத்து பிறந்து விட்டாள் என்ற பூரிப்பில் அவளை கட்டி அணைக்கிறார்.அது அவளது தந்தையின் அரவணைப்பல்லவா!!!

இறுதியாக நீதிமானை காரில் பாம் வைத்து கொல்கின்றனர் மாபியாக்கள்.
இதற்கு பதிலடியாக ரீட்டா தனது தற்கொலையின் மூலம் அத்தனை மாபியாக்களுக்கும் தண்டனை வழங்குகிறாள்.
எப்படி???!!! எனத்தெரிய ஆவலாயிருக்கிறதா?
சிம்பிள்...படம் பாருங்கள்

Thanks : http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

BLISS [Turkish ]2007 உலக சினிமா விமர்சனம்

பெண்ணாய் பிறத்தற்க்கே மாதவம் செய்திடல் வேண்டும் எனக்காலகாலமாக ஜல்லியடித்து ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை கொடுமைப்படுத்தப்படும் இனம் பெண்ணினம்.
வாச்சாத்தி கொடுமைக்கு நிவாரணம் பெற எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது?
ஒவ்வொரு நொடியும் பெண்கள்.... உலகில் ஏதாவது ஒரு மூலையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அந்த துன்பக்கடலின் ஒரு துளிதான் மரியம்.
அந்த அனிச்ச மலருக்கு வயது 17.
பார்பதற்கு நம்ம சிம்ரன் மாதிரி இருக்கும், இவள் தான் இந்த படத்தின் கதாநாயகி(மரியம்).

துருக்கி தேசத்து மலைகிராமத்தில் ....
நெடிதுயர்ந்த மலையின் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும்...
சலனமில்லாத குளத்தின் கரையில்...
துவைத்துப்போட்ட துணி போல் கிடக்கிறாள் மரியம்.
படத்தை உற்று பாருங்கள்.
அந்த இளங்குருத்தின் குருதி தொடை வழியே வழிந்தோடி குளத்து நீரில் கலப்பதை காண முடியும்.
முதல் காட்சி....முதல் ஷாட்டிலேயே இத்துன்பத்தை...துயரத்தை காட்டிய விதத்திலேயே 'நான் ஒரு உலகசினிமா வித்தகன்' என்பதை சொல்லி விட்டார் இயக்குனர் Abdullah Oguz.

நடந்த கொடுமைக்கு நிவாரணம் தேடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் ரணமாக்குவதானே நமது குல வழக்கம்.
தாயில்லாத மரியத்துக்கு பேயாக சித்தி.
கற்பழிக்கப்பட்ட பெண்ணை அழிப்பதுதான்....எங்குமே சாத்திரம்...சம்பிரதாயம். “தொங்கு”என கயிரை பரிசளிக்கிறாள் சித்தி.
உடலும்,மனமும் ரணமாகிப்போன மரியத்துக்கு ஆதரவு அன்றும்...இன்றும்...என்றும் ஒரே ஒரு பாட்டிதான்.
அவரிடம் கூட தன்னைக்குலைத்த மாபாதகனை காட்டிக்கொடுக்க மறுக்கிறாள் மரியம்.
மரியத்தை ஒழிப்பது எப்படி என்று ஊரே ஒன்று கூடி பேசுகிறது.
முடிவாக ஒரு ராணுவ வீரனிடம் பணியை ஒப்படைக்கிறார்கள்.
கொலைக்களனாக இஸ்தான்புல் நகரத்தை தேர்ந்தெடுத்து மரியத்தை பலியாடாக அழைத்துச்செல்கிறான்.
புண் பட்ட மரியத்தின் மனதுக்கு ஒவியம் போல் காட்சியளிக்கிறது இஸ்தான்புல் நகரம்.
நகரம் மறைந்திருக்கும் நரகம் என்பதறியா பேதை.
ராணுவத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக பணிபுரிந்தவனுக்கு போட்டுத்தள்ள சரியான இடம் சொல்லியா தர வேண்டும்?

துடிக்கும் துப்பாக்கியால் மரியத்தின் உயிரை குடிக்க முடியாமல் தவிக்கிறான்.
காரணம்....சிறு வயது முதல் அவனால் நேசிக்கப்பட்டவள் மரியம்.
தன்னை நேசித்தவன்... யாசிப்பது உயிர்... என்பதறிந்து  “எடுக்கவேண்டாம்....கொடுக்கிறேன்”என தற்கொலைக்கு துணிகிறாள்.
 “தூயவனே! செல்...என் தந்தையிடம் சொல்...
மரியம் மாசற்றவள்.....சொர்க்கத்தில் என் தாயை சந்திக்க செல்கிறேன்” என மரணத்தை நோக்கி மரியம் பாய்கையில் தடுத்து விடுகிறான் மாவீரன்.
பல்லாயிரம் உயிரைக்குடிக்கும் அணு உலையை திறக்கத்துடிக்கும் மத்திய அரசா அவன்?
மனிதநேயம் மிகுந்த மனிதன்.

இக்காட்சியை நூறு முறை பார்க்க வேண்டும் நமது படைப்பாளிகள்.
நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை ...இவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒரு காட்சியை எப்படி வீர்யமாக்குகின்றன என்பதற்க்கு இலக்கணம் இக்காட்சி.
இது போன்ற படங்களை நேசித்து பார்க்கும் படைப்பாளிகளிடம் வேலாயுதமும் ஏழாம் அறிவும் தோன்றாது.

வாழ நினைத்தால் வாழலாம்....
வழியா இல்லை பூமியில்.... என புறப்பட்ட ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஒரு பேராசிரியர்.
அலை கடலில் ஒரு தோணி...
அதில் வாழ்வதே என் பாணி....
என உல்லாசப்படகில் உலகம் சுற்றும் வாலிபன் அவர்.
 
அவரது தாடி மட்டும் வெள்ளையில்லை.. மனமும்.. என எண்ணுகிறாள் மரியம். 
அவர்,  பாலா....பாலிடாலா....என சந்தேகிக்கிறான் மாவீரன்.

மரியத்தை கெடுத்த மாபாவி யார்? என்ற முதல் கேள்வியிலிருந்து....
பேராசிரியர் நல்லவரா?கெட்டவரா?
மரியத்தை மாவீரன் ஏற்றானா?மறுத்தானா?
மரியம் வாழ்வாளா?வீழ்வாளா?
துப்பாக்கி வெடிக்குமா?வெடிக்காதா?
[மரியத்தின் உயிரைக்குடிக்க நினைத்த துப்பாக்கி... இன்னொரு காட்சியில் குளோசப்பில் காட்டப்படுகிறது.
துப்பாக்கிக்கு குளோசப் ஷாட் போட்டால் அது வெடிக்க வேண்டும் என்பது மாமேதை ஹிட்ச்ஹாக் கடைப்பிடித்த கோல்டன் ரூல்.]
என பல துணை கேள்விகளோடு படம் பயணிக்கிறது.





Thanks to :http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

Tomboy-2011 உலக சினிமா விமர்சனம்

ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தனது கர்ப்பிணி மனைவியோடும்...
தனது இரு பிள்ளைகளோடும்... புதிய ஊருக்கு குடிவருகிறார்.
மூத்த பிள்ளைக்கு... பக்கத்து பிளாட்டில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.
ஹாய்...என் பெயர் லிசா...உன் பெயர் என்ன?

மைக்கேல்...என் பெயர் மைக்கேல்...
நாங்க இங்க புதுசா குடி வந்திருக்கோம்.

வா...இங்க எல்லோர் கூடவும் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..

புதிய இடத்தில்...புதிய நண்பர்களோடு...புதிய வாழ்க்கை கிடைக்கிறது...
பத்து வயது மைக்கேலுக்கு.
மற்ற நண்பர்களை விட லிசா ஸ்பெசலாக இருக்கிறாள்.

இருவருக்கும் பப்பி லவ் தொடங்குகிறது.
லிசா கொடுக்கும் முதல் முத்தம்... சொர்க்கத்தை தொட்டு விடும் தூரத்தில் காட்டுகிறது.

சரி...ஒரு பத்து வயது சிறுவனும்...சிறுமியும் காதலிப்பதில் என்ன புதுமை இருக்கிறது?
ஆனால் பத்து வயது மைக்கேல்...சாரா...என்கிற பெண்....
என அறியப்படும் போது படம் விஸ்வரூபம் எடுக்கிறது.

மைக்கேலாக வாழ்கின்ற சாராவின் அகவாழ்க்கை பயணத்தையும்...
புற வாழ்க்கை பயணத்தையும்...படத்தில் அழகாக....கவிதை நயமிக்க காட்சிகளாக்கி விருதுகளை அள்ளியிருக்கிறார் இயக்குனர்... Celine Sciamma.

தமிழில் பள்ளிப்பருவக்காதலை கலை நயத்துடன் சொன்னபடம்...
பன்னீர் புஷ்பங்கள்.
இப்படத்தை இயக்கியவர்கள் யார் தெரியுமா?
பாரதி-வாசு என்ற இருவர்கள்.
வெகு விரைவில் இருவருமே பிரிந்து...
ஒருவர்...சந்தானபாரதியாகவும்....
மற்றொருவர் பி.வாசுவாகவும்...
மசாலாப்பட இயக்குனர்களாக உருமாறி விட்டனர்.

 Thanks: http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

RUN LOLA RUN விமர்சனம்

RUN LOLA RUN - மூன்று விதமான ஓட்டங்கள்

சமீபத்தில் வெளியான  'நேரம்' திரைப்படம் வித்தியாசமான திரைக்கதை அமைப்புக்காக பாராட்டப்பட்டது.
‘ரன் லோலா ரன்’ &  ‘நேரம்’ திரைப்படங்களை பார்த்தவர்கள்...
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளை நன்கு புரிந்திருக்க முடியும்.
 'நேரம்' படத்தின் கதையை ‘ரன் லோலா ரன்’ படத்தின் பாதிப்பில்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால் திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தி ஜெயித்து விட்டார்  'நேரம்' இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
மூன்று விதமாக சொல்லப்பட்ட  'ரன் லோலா ரன்' திரைக்கதையை,
 ‘நேரத்தில்’ ஒரே நேர் கோட்டில் சொல்லி வித்தியாசப்படுத்தி விட்டார் 'இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்’.

 ‘ரன் லோலா ரன்’ திரைப்படத்திற்குள்,
உடனடியாக போவதற்கு பதிலாக...
சற்று வரலாற்றின் பக்கம் போய் விட்டு வருவோம்.
1880 ஆம் ஆண்டில்தான்  'கேமரா' கண்டு பிடிக்கப்பட்டு  'சினிமா' வளர்ந்தது.
சரியாக பத்து வருடம் கழித்து,
1890 ஆம் ஆண்டில்  'சைக்கோஅனாலைசிஸ்' [ Psychoanalysis ] கோட்பாட்டை,
‘சிக்மண்ட் பிராய்ட்’ [ Sigmund freud ] உலகிற்கு வழங்கினார்.
இதன் தாக்கம் இலக்கிய உலகிலும் நிகழ்ந்தது.

‘இயக்குனர் டாம் டிக்கர்’ உருவாக்கிய ‘ரன் லோலா ரன்’ 
ஒரு ‘போஸ்ட் மாடர்ன் பிலிம்’
இதன் கதை,திரைக்கதையை ‘பிராபப்பிலிட்டி தியரி’ [Probability Theory] அடிப்படையில் உருவாக்கி உள்ளார்.
வழக்கமான ஹாலிவுட் பாணியான ‘அரிஸ்டாட்டில் பார்மிலிருந்து’ விலகி
இத்திரைக்கதையை வடிவமைத்து உள்ளார்.

ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்து காதலர்கள் ஜெயித்தார்களா? இல்லையா ?
என்பதை மூன்று விதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் டாம் டிக்கர்.
மூன்றுக்குமே அடிப்படை ஒன்றுதான்.
அடிப்படையை முதலில் பார்ப்போம்.

மானி சிறிய அளவில் கிரிமினல் வேலைகளை செய்பவன்.
மானி, தன் காதலி லோலாவுக்கு போன் செய்கிறான்.
 ‘நீ சரியான நேரத்துக்கு வராததால்  எல்லாமே பாழாக போய் விட்டது’ எனக்கதறுகிறான்.
 “ சிகரெட் வாங்க கடைக்கு போகும் போது தனது மொபட்டை ஒருவன் திருடிக்கொண்டு ஓடி விட்டான்.
அவனை பிடிக்கவே முடியவில்லை.
அதனால் வர முடியவில்லை” என சமாதானம் சொல்கிறாள் லோலா.

“ திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து பணம் கிட்டியது.
நீ வராததால் சப்-வே ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் ரயிலில் ஏறினேன்.
ரயிலுக்குள் காவலர்கள் வந்ததால் நைசாக இறங்கி நடந்தேன்.
அப்போதுதான் பணப்பையை ரயிலிலேயே விட்டு விட்டது ஞாபகத்துக்கு வந்தது.
அதை எடுக்கத்திரும்பும் போது காவலர்கள் மடக்கி விட்டார்கள்.
அந்தப்பையை ரயிலில் இருந்த  ‘குப்பை பொறுக்குபவன்’ எடுத்து விட்டான்.
அவன் இந்நேரம் வெளிநாடு போயிருப்பான்.
இன்னும் 20 நிமிடங்களுக்குள் ஒரு லட்சம்  ‘மார்க்’ பணத்தை ஒப்படைக்காவிட்டால் ‘ரோனியின் மாபியா கேங்’ என்னைக்கொன்று விடும்” என்கிறான் மானி.

லோலா : எங்கேயாவது ஓடி விடு.

மானி : ரோனிகிட்ட இருந்து தப்ப முடியாது.
‘நீ முன்னாடி ஒரு தடவை சொன்னியே...
 “காதல் எல்லாம் செய்யும்னு”
இப்ப 1,00,000 மார்க்... 20 நிமிஷத்துல வேணும். 

லோலா : “சரி... நான் பணத்துடன் வருகிறேன். காத்திரு.” 

  மானி : “ 20 நிமிடத்துக்குள் வராவிட்டால் எதிரில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கொள்ளையடிக்க போகிறேன் ”

போன் ரீசிவரை விட்டெறிகிறாள் லோலா.
ரீசிவர் சுழண்டு சுழண்டு போனில் சரியாக அமருகிறது.

பணம் கிடைத்ததா ?
20 நிமிடத்துக்குள் மானியிடம் சேர்க்க முடிந்ததா ??

இதுதான் அடிப்படைப்பிரச்சனை.
இப்பிரச்சனைக்கு லோலா தீர்வு காண்பதை,
மூன்று விதங்களாக ‘பிராபப்பிலிட்டி தியரியில் ’ சொல்லி இருக்கிறார் இயக்குனர் டாம் டிக்கர்.

Source : http://worldcinemafan.blogspot.in
Image by FlamingText.com

Search This Blog