ராவணன் சீதையின் மீது ஆசைப்பட்டதும் ராமனுக்கும் ராவணனுக்கும் போர்
நடந்தது, ராமன்
போர்க்களத்தில் ராவணனை அழித்த பிறகு, ராவணனின் மனைவி ராமனிடம் வந்து பேசிய
கதை பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தன்னுடைய கணவனை கொன்று வெறி தீர்த்துக் கொண்ட ராமனிடம் அப்படி என்னதான் பேசினாள் மண்டோதரி.
ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமன் ஓய்வாக தரையை நோக்கியபடி
அமர்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது. அந்த
நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை
ராமன் நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை
உள்ளிழுத்துக் கொண்டார்.
நீ யாரம்மா?" என்று ராமன் இந்த பெண்மணியிடம் கேட்க, அதற்கு
"நான் ராவணனின் மனைவி மண்டோதரி.
என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே
ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க
வேண்டும் என நினைத்தேன். மேலும். க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த
பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ வரவில்லை.
ஆச்சரியப்பட்டேன்.
இங்கே நீங்கள் (ஒரு பெண்ணின்) என்னுடைய நிழல் உங்கள் மீது படுவதைக்
கூட விரும்பவில்லை என்னும்போதே, உங்களுடைய சிறந்த குணத்தைப் பற்றி நான்
தெரிந்து கொண்டேன். அதிலுள்ள உங்களுடைய குணத்தைப் பற்றி நான் என்ன
சொல்வேன்?
இதற்கு முன்பாக, ஏற்கனவே என்னுடைய கணவரிடம் கூட பலமுறை நான்
சொல்லியிருக்கிறேன். ரகு வம்சத்தில் பிறந்திருக்கின்ற ராமன் மனிதப் பிறவி
அல்ல. அவர் இந்த உலகத்தைக் காக்கின்ற பரம்பொருளாகத் தான் இருப்பார். இந்த
உலகைக் காக்க விஸ்வரூபம் எடுத்து வந்தவர் தான் அவர். ஏனெனில் அவர் தன்னுடைய
உடலின் ஒவ்வொரு அங்கங்களிலும் இந்த பிரபஞ்சத்தையே தாங்கி நின்று
கொண்டிருக்கிறார் என்று நான் கூறியிருக்கிறேன்.
இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற பாதாள உலகம் தான் அவனுடைய பாதங்கள்.
பிரம்மலோகம் தான் ராமனுடைய தலை. இந்த உலகுக்கே வெளிச்சம் தரக்கூடிய சூரியன்
தான் ராமனுடைய கண்கள். இந்த ஆகாயத்து மேகங்கள் தான் அவருடைய தலைமுடி.
இவற்றையெல்லாம் விட, ராமன் கண்ணிமைகளை மூடி திறப்பது தான் நமக்கு இரவு
பகலாக மாறி மாறி வருகிறது. எட்டு திசைகளும் தான் அவருடைய செவிகள். இவை
எல்லாவற்றையும் விட, ராமனுடைய பெயர் தான் இந்த உலகில் நாம் செய்த எல்லா
பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அவன் நான்கு
வேதங்களின் சாரமாக விளங்கக்கூடியவன். ராமன் தெய்வ வடிவம் என்பதில் எனக்கு
எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதனால் அவரிடம் பகை கொள்ளாமல் வஞ்சகத்தை
ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்' என்று மன்றாடிக் கேட்டேன். அதை அவர் செவி
கொடுத்துக் கேட்கவில்லை.
இவ்வளவு நான் எடுத்துக் கூறியும் என்னுடைய கணவர்அதை கேட்க
மறுத்துவிட்டார். உங்களுடைய வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு
நல்ல குணம் உங்களிடத்தில் இருந்தது தான். அதுதான் உங்களுடைய ஏக பத்தினி
விரதத்தன்மை. அதனால் தான் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற என்னுடைய
கணவரை நீ வென்றாய்," என்று கூறினாள்.
மண்டோதரி பேசுவதை மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ராமன், லேசாக
சிறு புன்னகையை மட்டுமே அவளிடம் உதிர்த்து விட்டு, தன்னுடைய ஒரிஜினல் சுய
வடிவமான நாராயண வடிவத்தில் மண்டோதரிக்குத் திசனம் கொடுத்தார்.
ஹனுமனின் ஐயம்.
ராமாயணக் காப்பியத்தில் மிகச்சிறந்த பாக்கியசாலியாக மண்டோதரி
கருதப்பட்டாள். ஏன் தெரியுமா?... ஹனுமன் சீதையைத் தேடி இலங்கையில்,
ராவணனின் அந்தப்புரத்துக்கு சென்ற பொழுது, அங்கு ஹனுமனின் கண்களில் மிக
ஒழுங்கான,அழுத்தம் திருத்தமாய், நேர்த்தியாய் உடை அணிந்த பெண்ணாக மண்டோதரி
காட்சி அளித்தாள். அதைக்கண்ட ஹனுமான முன் பின் சீதையை நேரில் பார்த்ததில்லை
என்பதால்,இவள் தான் சீதையாக இருக்குமோ என்று கூட சந்தேகப்பட்டார். அந்த
அளவுக்கு அழுத்தம் திருத்தமாக உடை அணிந்திருந்தாள்.
அந்த அளவுக்கு ஒழுக்கம் நிறைந்தவளாக காட்சி தந்ததோடு அவ்வாறே விளங்கவும்
செய்தாள். அந்த காரியத்துக்காகத் தான் கொடியவனான ராவணனுக்கு மனைவியாக
வாழ்க்கைப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அவருக்கு நாராயண தரிசனம் கிடைக்கப்
பெற்றது.






