Pages

Subscribe:

Wednesday, August 17, 2011

Daily Update


 
மனித மூளை போன்ற சிப் : ஐ.பி.எம் சாதனை!

அறிவாற்றல் உடைய கணினி தொழிநுட்ப துறையில் புதிய பரிணாம வளர்ச்சியாக மனித மூளையின் செயல்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' யை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த 'சிப்' மனிதர்களின் மூளையைப் போல நினைவுகளை செயல்முறைப்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளுதல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளுதல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான பதிலை வழங்குதல் ஆகியவை இந்த சிப்பின் முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவித்துள்ளது.  இதனை உருவாக்க 100 ஆராய்ச்சியாளர்கள் சுமார் 6 வருடங்களாக பணியாற்றியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி.எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


===================================================================

திஹார் சிறையிலிருந்து வெளிவந்தார் அன்னா- கொட்டும் மழையில் மக்கள் புடை சூழ ஊர்வலம்:
 
டெல்லி: கடந்த 3 நாட்களாக திஹார் சிறையில் இருந்த அன்னா ஹஸாரே இன்று பிற்பகலில் வெளியே வந்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ திஹார் சிறை வாசலிலிருந்து மாயாபுரி வரை அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அன்னாவின் ஊர்வலம் நடந்தது.

முன்னதாக இன்று பிற்பகல் 12 மணியளவில் திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த ஹஸாரேவை வாசலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ஆதரவாளர்களும் உற்சாகக் குரல் கொடுத்து வரவேற்றனர். அவர்களிடையே சிறிது நேரம் மைக் மூலம் பேசினார் ஹஸாரே.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவை ஊழல்வாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் வரை நாம் அயராமல் பாடுபடுவோம், போராடுவோம் என்றார் அன்னா.

டிரக்கில் ஊர்வலம்

பின்னர் அவர் அங்கிருந்து ஒரு டிரக் மூலம் கிளம்பினார். வேன் மீது தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி காணப்பட்ட அன்னாவை நோக்கி ஆதரவாளர்கள் உணர்ச்சி பொங்க கோஷமிட்டனர். பின்னர் அந்த டிரக்கில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் ஹஸாரே. வழியெங்கும் கூடியிருந்த ஆதரவாளர்கள் அன்னாவுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர்.

பலத்த மழை பெய்து வந்த போதிலும் மகக்கள் அதைப் பொருட்படுத்தாமல் அன்னாவுடன் ஊர்வலமாக சென்றனர். எழுச்சி பொங்க அன்னாவின் டிரக்கைச் சுற்றிலும், பின் தொடர்ந்தும் மக்கள் அலையென வந்ததைப் பார்த்தபோது உணர்ச்சிகரமாக இருந்தது.

மாயாபுரி வரை ஊர்வலமாக செல்லும் ஹஸாரே அங்கிருந்து ராஜ்காட் செல்கிறார். காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் ராம்லீலா மைதானத்திற்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.

அன்னாவின் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்தது. இதை மீறப் போவதாக அவர் கூறியதைத் தொடர்ந்து கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். இதனால் ஆவேசமடைந்த அன்னா சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அவருக்கு ஆதரவாக டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மத்திய அரசு பணிந்தது. அன்னாவை விடுதலை செய்தது.

இருப்பினும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளியே வர மாட்டேன் என்று அன்னா கூறி விட்டார். இதையடுத்து டெல்லி காவல்துறை, அன்னாவின் ஆதரவாளர்களோடு பேச்சு நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 15 நாட்கள் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியது. மேலும் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏற்பதாக அன்னா தரப்பு கூறி உத்தரவாதம் வழங்கி கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தில், எனது ஆதரவாளர்கள் யாரேனும் விதிமுறைகளை மீறினால் என் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று அன்னா ஹஸாரேவே உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது. 15 நாட்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பின்னர் தேவைப்பட்டால் நாட்களை நீடித்துக் கொள்ள முடியும் என்று அன்னா தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க பெரும்திரளானோர் குவிந்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விரிவான ஏற்பாடுகளை டெல்லி மாநகராட்சியும் செய்து கொடுத்துள்ளது.
  
English summary
Anna Hazare is in Delhi's Tihar Jail and will proceed to Ramlila Maidan to launch a 15-day protest against corruption with thousands of supporters today. And Team Anna has made clear that his is an "indefinite fast and dharna" and not "a fast unto death." The Gandhian activist has spent two nights in jail already, though the police said he was free to leave on Tuesday, hours after he was arrested and taken to prison, prompting huge protests across India.
================================================================



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog